Wednesday, October 31, 2018

புதுக்கோட்டைக்குடைவரைகள்-4

திருமெய்யம் (திருமயம்)

மூன்று குடைவரைகளையும் ஒரு கோட்டையையும் கொண்ட திருமயம் குன்றானது புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. உண்மையின் இருப்பிடம் என்னும் பொருளைத் தரும் திருமெய்யம் என்ற சொல்லானது காலப்போக்கில் மருவி திருமயம் என்றானது. முத்தரையர், சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள், சிற்றரசர்கள், சேதுபதிகள், பல்லவராயர்கள், தொண்டைமான்கள் என பல்வேறுபட்ட அரசுகளால் ஆளப்பட்ட பகுதியிது. திருமயம் குன்றின் கோட்டைக்கு சற்று கீழாக மேற்பகுதியில் ஒரு சிவன் குடைவரையும், கீழே சிவனுக்கு ஒன்றும் திருமாலுக்கு ஒன்றுமென இரண்டு குடைவரைகளும் குடையப்பட்டுள்ளன.

மேற்குடைவரை



 நில மட்டத்திலிருந்து மூன்று ஆள் உயரத்திற்கு மேலான உயரத்திலே குடையப்பட்டுள்ள இக்குடைவரையை அடைவதற்கு ஏணி வைக்கப்பட்டுள்ளது. கருவறை மட்டுமே கொண்ட மேற்குப் பார்த்த குடைவரை. தாய்ப்பாறையிலமைந்த ஆவுடையுடன் லிங்கம் கொண்ட கருவறையின், வலப்புறத்தே சரிந்துள்ள பாறையில் செவ்கக் கட்டம் கட்டி எழுதப்பட்டுள்ள சிதைந்த கிரந்தக் கல்வெட்டானது பரிவாதினி என்று வீணையைக் குறிப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

சத்தியகிரீஸ்வரம்



சத்தியகிரீஸ்வரர் என்று இந்நாளில் அழைக்கப்படும் மெய்யம் மகாதேவர் கோயில் திருமயம் குன்றின் தென்புறச் சுவரில் அமைந்துள்ள இரண்டு குடைவரைகளில் ஒன்றாகும். குடைவரைக்கு முன்பாக அம்மன் சன்னதியும் பிற தெய்வங்களுக்கு சிறு சன்னதிகளும் மண்டபங்களும்  பிற்காலத்தில் எடுக்கப்பட்டுள்ளன.  கிழக்குப் பார்த்த கருவறையும் தெற்கு பார்த்த அர்த்த மண்டபமும் கொண்ட குடைவரையின் கருவறையிலே லிங்கமுள்ளது.



கருவறையின் இருபுறமுள்ள வாயிற்காவலர்களின்  சிற்பங்களும், கருவறையின் எதிர்ப்புறமுள்ள லிங்கோத்பவர் சிற்பமும் மிக அழகானவை.  தமிழகத்தின் பழமை வாய்ந்த லிங்கோத்பவர் சிற்பங்களில் இதுவும் ஒன்று. அர்த்த மண்டபத்தின் நடுவே கருவறையைப் பார்த்தவாறு நந்தி உள்ளது. குடைவரையின் வடசுவர் பாறையில் பரிவாதினி என்ற கிரந்தக் கல்வெட்டு செவ்வகக் கட்டம் கட்டி வெட்டப்பட்டுள்ளது. அதன் கீழே



'ஞ்சொல்லிய புகிற்பருக்கும்
.....தெமி முக்கந் நிருவத்துக்கும்
..ப்பியம்'

என்ற தமிழ்க் கல்வெட்டுள்ளது. இக்குடைவரையின் தென்புறச்சுவரிலே அந்நாளில் இசைக்கல்வெட்டு இருந்ததாகக் கருதப்படுகிறது. 13ஆம் நூற்றாண்டிலே இக்கல்வெட்டானது அழிக்கப்பட்டு அதன் மீது  சுந்தரபாண்டியனின் 7ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.



அழிக்கப்பட்ட கல்வெட்டின் எச்சங்கள் புதிய கல்வெட்டின் கிழக்கே எஞ்சியுள்ளன.  புதிதாக வெட்டப்பட்ட இக்கல்வெட்டிலேயே, அழிக்கப்பட்ட கல்வெட்டானது பாஷை அறியாத கல்வெட்டாக குறிக்கப்பட்டு அதையழித்த செய்தியும் உள்ளது. 47 வரிகளைக் கொண்ட இப்புதிய கல்வெட்டின் செய்தியைக் காண்போம்.



கல்வெட்டுச் செய்தி:

இக்கல்வெட்டானது திருமயம் சிவன் கோவில் நிர்வாகிகளுக்கும், திருமால் கோயில் நிர்வாகிகளுக்கும் இடையே கோயில் வருவாய் பங்கீட்டு தொடர்பாக பிணக்கு ஏற்பட்டு நீநாளாய் நிலவிவந்த சச்சரவை தீர்த்து வைத்து சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதை உரைக்கின்றது. இரு கோயில் அதிகாரிகளும் ஊரதிகாரிகளும் சூழ ஹோய்சாள அரசரின் தண்டநாயக்கரும் அந்நாளில் இந்நாட்டை பிடித்தவருமான (திருமயம் ஊரானது இவ்வழக்கு நடைபெற்ற காலத்தில் கானநாட்டின் ஒரு பகுதியாக இருந்தது)  இரவிதேவரின் மைத்துனன் அப்பண்ண தண்டநாயக்கர் முன்னிலையில் சபையோர் ஒருமித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் சாராம்சமானது

1. மெய்யத்திலும் அதன் பிடாகைகளிலுமுள்ள நிலங்களின் விளைச்சலில் நிலவரியாக கோயில் கொள்ளும் நெல் முதலில் 3/5 பங்கினை திருமால் கோவிலான நின்றருளிய தேவர் கோவிலும், 2/5 பங்கினை சிவன் கோவிலும் பிரித்துக்கொள்வது.
2. அருகருகிலிக்கும் இவ்விரண்டு கோவில்களையும் பிரிக்க நடுவே ஒரு முழ அளவுள்ள மதில் எழுப்ப வேண்டியது, அதற்காக ஆகும் செலவுகளை வாங்கும் வரிகளின் அடிப்படையில் இரு கோவில்களும் பிரித்துக் கொள்வது.
3. இரு கோயில்களுக்கும் தனித்தனியாக நீர்நிலை ஒதுக்கப்பட்டு, அதிலிருந்து தூர்வை வாங்கும் போது இரு கோயிலாரும் கண்காணியிட்டு வாங்குவது.
4. இரு கோவில்களுக்கான எல்லைகள் பிரிப்பு. இதிலும் ஒதுக்கப்பட்ட நிலப்பகுதியானது 3/5 பங்கு திருமால் கோவிலுக்கும், 2/5 பங்கு சிவன் கோவிலுக்கும் பிரிக்கப்பட்டது.
5. உவச்சர்களுக்கு நிலக் காணியாக அளிக்கப்பட்டிருந்த திருமால் கோவில் நிலங்கள் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் கோயிலுக்கே உடமையாக்கியது. மேலும் உவச்சர்களை இரு கோயிலாரும் தேவைக்கேற்ப பணியமர்த்திக் கொள்வது.
6. நின்றருளிய தேவர் கோவிலுக்கும் இவ்வூரிலிருந்த வானவன்மாதேவி ஈஸ்வரம் என்ற கோயிலுக்கும் நிலப்பரிமாற்றம் நிகழ்ந்தது.
7. இந்நாட்டாரும் அப்பண்ண நாயக்கரும் இரு கோயில்களுக்கும் நிலங்களைக் கொடையாக நீர்வார்த்தளித்தது.
8. சிவன் கோவிலுள்ள திருமால் கோயில் தொடர்பான கல்வெட்டுகளை திருமால் கோயிலார் படியெடுத்து தம் கோவிலில் வெட்டிக் கொள்வது அவ்வாறே சிவன் கோவிலாரும் செய்வது. இதை ஏற்காதோர் அரசிற்கு இருநூறு அச்சு தண்டம் செலுத்த வேண்டியது.

மேலும் இக்கல்வெட்டில் பழங்கல்வெட்டுகளை அழித்த செய்தியையும் பதிவு செய்துள்ளனர். சிவன் கோயில் வாசலின் கீழ்ச் சுவற்றின் ஒரு கல்வெட்டும், அதனருகே இருந்த பாஷை அறியாத கல்வெட்டும் (இசைக் கல்வெட்டு?), பெருமாள் கோவிலிலிருந்த ஒரு கல்வெட்டும் அழிக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு உரைக்கின்றது. இந்த கல்வெட்டின் பிரதியொன்று கோயில் வளாகத்திலுள்ள சுனைக்கு வடபுறமுள்ள பாறையில் வெட்டப்பட்டுள்ளது.

கல்வெட்டுச் சொல்லகராதி:

பிடாகை - பெரிய ஊருக்குச் சேர்ந்த சிற்றூர்; தூர்வை - சேறு முதலியன; கண்காணி - மேற்பார்வையாளர்; உவச்சர் - இசைக் கலைஞர்; நிலக் காணி - நில உரிமை;

சத்தியமூர்த்தி




சத்தியமூர்த்தி என்று இந்நாளில் அழைக்கப்படும் வைணவக் கோவிலானது சிவன் கோவிலின் கிழக்கே மதிற் சுவரால் பிரிக்கப்பட்டு,  மெய்யம் பள்ளி கொண்ட பெருமாள் குடைவரையுடன், சத்திய மூர்த்தி சன்னதியும், உஜ்ஜீவனத் தாயார் என்ற அம்மன் சன்னதியும், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள் என பிற தெய்வங்களுக்கென தனி சன்னதிகளும், மண்டபங்களும் கொண்ட பெரு வளாகமாக திகழ்கிறது. இங்குள்ள சன்னதிகளுள் காலத்தால் முந்திய பள்ளி கொண்ட பெருமாள் குடைவரையானது கோயிலின் மேற்குச் சுற்றின் முடிவிலே, குடைவரையை சிவன் கோவிலில் இருந்து பிரிக்கும் மதிற்சுவருக்கு அருகாமையில் திருமயம் குன்றின் சரிவில் தெற்கு பார்த்து உள்ளது. கருவறையிலுள்ள பெருமாள் சிற்பம்  வலக்கையை நீட்டியவாறு ஆதிசேஷனாகிய ஐந்தலை நாகத்தினைப் படுக்கையாகக் கொண்டு கிடந்த நிலையில் உள்ளது. இச்சிற்பத்திற்கு பின்னாக பெருமாளின் தொப்புள் கொடியிலிருந்து பிரம்மனும், மார்பருகே திருமகளும், காலில் நிலமகளும் உள்ளனர். நான்முகனை நடுவாய் கொண்டு சந்திரனில் துவங்கி, மார்க்கண்டேர், பொந்து முனிவர்கள், கருடன், தேவர்கள், காலருகே அரக்கர்களான மது, கைடபர், இறுதியாக சூரியன் என நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள், திருமகளையும் நிலமகளையும் கடத்த முற்பட்ட மது கைடபர் என்ற இரு அரக்கர்கள் ஐந்தலை நாகத்தின் சீற்றத்திற்கு பயந்து திரும்பியோடிய புராணத்தை உரைக்கும் விதமாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் காலத்தால் முந்தியதாவது குடைவரைக்கு வெளியே கிழக்காக, இரும்புக் கதவின் துணைகொண்டு பாதுகாக்கப்படும், பிடிச்சுவரில் செதுக்கப்பட்ட பெருந்தேவிக் கல்வெட்டாகும். இக்கல்வெட்டு உரைக்கும் செய்தியை இனிக் காண்போம்.



கல்வெட்டுச் செய்தி:

பொயு 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படும் இக்கல்வெட்டு விடேல் விடுகு முத்தரையன் என்றும் விழுப்பேர் அதியரைசன் என்றறியப் படும் சாத்தன் மாறனின் தாய் பெரும்பிடுகுப் பெருந்தேவி கோயிலொன்றை புதுப்பித்த செய்தியையும், தாம் புதுக்கிய கோயிலுக்கு உண்ணாழிகைப் புறமாக அண்டக்குடி  என்னும் ஊரைக் காராண்மை மீயாட்சி உள்ளடங்க கொடையளித்த செய்தியையும் சொல்கிறது.  (பெருந்தேவி எதைப் புதுப்பித்தார் என்று கல்வெட்டிலில்லை, கோயிலென்று கொள்கின்றனர்)

கல்வெட்டு சொல்லகராதி:

உண்ணாழிகைப் புறம் - கருவறைச் செலவுக்கு விடப்பட்ட நிலம்; காராண்மை - பயிரிடும் உரிமை; மீயாட்சி - நிலத்தின் மீதுரிமை;

திருமயம் குன்றின் மீது 17 ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் கிழவன் சேதுபதியின் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை ஒன்றும் உள்ளது.

Saturday, October 27, 2018

கல்வெட்டின் நிலையறிதல் - 17



விழுப்புரத்தில் இருந்து செஞ்சிக்கு செல்லும் வழியில் செஞ்சியில் இருந்து சுமார் பதினேழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மண்டகப்பட்டு என்னும் சிற்றூர்.
இவ்வூரின் மேற்கே ஒரு குன்றுஒன்றில், தரையிலிருந்து சுமார் 4 அடி உயரத்தில் மகேந்திரவர்மனால் ஒரு குடைவரை குடைவிக்கப்பட்டுள்ளது.

இக்குடைவரை மும்மூர்த்திகளுக்கும் எடுக்கப்பட்டது இதன் சிறப்பு. மண்டகப்பட்டு குடைவரையை மகேந்திரவர்மனின் ஆரம்பகால குடைவரை என அறிஞர்கள் கருதுவர்.

இக்கோவிலின் கிழக்கு அரைத்தூணில் மேற்குப்பகுதியில் ஒரு வடமொழி கல்வெட்டொன்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலை நான்முகன், திருமால், சிவபெருமான் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் மண்ணின்றி, உலோகமின்றி, சுதைஇன்றி, மரமின்றி விசித்திரசித்தன் தோற்றுவித்தான் என பொருள்படும் கல்வெட்டு இது. இதிலிருந்து இதற்கு முன்னர் மண், சுதை, உலோகத்தினாலே கோவிலை மன்னர்கள் எழுப்பினர் என்பது தெளிவாகிறது.

இக்கல்வெட்டின் வாசகம்,
"ஏதத் அநிஷ்டகம் அத்ருமமலோ
கம் அசுதம் விசித்ர சித்தேந
நிர்ம்மாபிதந் நிருபேண பிரமே
ஸ்வர விஷ்ணு லக்ஷிதாயதநம்"


Monday, October 22, 2018

கல்வெட்டின் நிலையறிதல் - 16


நந்திக்கலம்பகம் பாடப்பெற்ற  நந்திப்போத்தரையர் எனும் மூன்றாம் நந்திவர்மனின் பத்தாம் ஆட்சி ஆண்டிற்குள்   நடைபெற்ற தெள்ளாற்றுப் போரினில்  கலந்து கொண்டு எதிரிவீரனின் அம்புக்கணைக்கு  இலக்கானபோதும் வெற்றியை தம்மன்னவனுக்கு ஈட்டித்தந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நினைவுச்சின்னம் இது. கல்வெட்டுடன் கூடிய இந்நடுகல் சற்று காலம் கடந்து நந்திவர்மரின் இருபத்தியோராம் ஆட்சியாண்டில் தான் நிறுவப்பட்டுள்ளது. கல்வெட்டிலிருந்து இவ்வீரரின் பெயர் சத்திமுற்றதேவன். இவ்வீரர் போரில் முன்னேறிச் செல்லும் பாங்குடன் இடையில் அரையாடையும் இடக்கரத்தில் கேடயமும் வலக்கரத்தில் வாளும் தாங்கி நிற்கின்றார். காது மற்றும் கழுத்தில் அணிகலன் அலங்கரிக்கின்றன. மார்பின் பகுதியில் அம்புதைத்துள்ளது. (A.R.No. 144 of 1928-29) கல்வெட்டு சிறிது சிதைந்துள்ளது.


Monday, September 17, 2018

கல்வெட்டின் நிலையறிதல் -15

 
முதலாம் ராஜராஜ சோழரை அவரது மெய்கீர்த்தி இன்றி குறிக்கும் கல்வெட்டுகள் சாலைகலமறுத்த கோவிராஜகேசரி என்றே முதன்மைபடுத்துகின்றது என்பதை நாமறிவோம். அவ்வளவு சிறப்புமிக்க போரினைப்பற்றிய தகவல்கள் கிடைக்காதது நமக்கு ஒரு வியப்பான விடயமே ! இன்றுநாம் காணவிருக்கும் கல்வெட்டுச்செய்தி ராஜராஜரையும் மதிரைகொண்ட  ராஜராஜதேவர் எனக்கூறும் கல்வெட்டு செய்தியாகும்.
மதிரைகொண்டகொப்பரகேசரி என்று முதலாம் பராந்தகரும், 
மதிரைகொண்டராஜகேஸரி என்று சுந்தரசோழரும் மதுரையை வென்றதன் பொருட்டு தமக்கு பட்டப் பெயரைச் சூட்டிக்கொண்டனர். அதே போன்று
ராஜராஜசோழனும் மதுரையை வென்றதனை குறிக்கும் விதமாக மதிரை கொண்ட இராஜராஜதேவர் எனப் பட்டம் சூட்டிக் கொண்டார். இச்செய்தியை  அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியமறை எனும் பகுதியில் வீற்றிருக்கும் காளி கோயிலில் தனியே வைக்கப்பட்டிருக்கும் நிலைத் தூண் கல்வெட்டு தாங்கிநிற்கிறது. ராஜேந்திரசிங்கவளநாட்டில் மிறைக்கூற்றதில் உள்ள உஞ்சேனைமாகாளமுடைய பட்டராகிக்கு (உஜ்ஜைனிமாகாளிக்கு) மற்றும் உஞ்சேனைமாகாளமுடைய கூத்தர்க்கும் (நடராஜர் )க்கும் விளக்கு எரிக்க இன்றைய திரணி எனும் ஊரை (தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊரிது)    எறிந்து நிறையாக கொண்டுவந்த 236 ஆடுகளை தானமாக கொடுத்துள்ளதை தெரிவிக்கும் இந்தக் கல்வெட்டு தற்போது புணரமைப்பில் இடம்பெயர்ந்து கோவிலின் டைல்ஸ் பூச்சுகளினுள்ளே புதையுண்டு கிடக்கிறது . கல்வெட்டின் நிலையும் கல்வெட்டுச்செய்தியும் படமாக இணைத்துள்ளோம். 

Monday, September 10, 2018

கல்வெட்டின் நிலையறிதல் - 14

மகேந்திரர் சிற்பம்



திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் இன்று மலைக்கோட்டை என்றழைக்கப்படும் சிரா மலையில் வீற்றிருக்கும் உச்சிப் பிள்ளையாருக்குச் சற்று கீழாக தெற்குப் பார்த்தவாறு லலிதாங்குர பல்லவேஸ்வர கிருகம் என்ற பல்லவர் கால குடைவரை ஒன்று உள்ளது. பொஆ 6,7 ஆம் நூற்றாண்டிலே  தமிழகத்தையாண்ட பேராளுமை கொண்ட பல்லவனும் கல்வெட்டுக்களிலே லலிதாங்குரன், சத்ருமல்லன், விசித்திரசித்தன், சித்திரகாரப்புலி, கலகப்பிரியன், சங்கீர்ண ஜாதி, குணபரன் என்றழைக்கப் படுபவனுமான முதலாம் மகேந்திரவர்மன் எடுப்பித்த இக்குடைவரையில், தன் கால்களுக்கு இருபுறமும் மண்டியிட்டு அமர்ந்த மனித உருவங்களுடன் மேற்கு பார்த்தவாறு கங்காதரர் சிற்பம் ஒன்று உள்ளது.

அச்சிற்பத்திற்கு இருபுறமும் உள்ள வடமொழிக் கல்வெட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ள இப்பாடல் வடிவக்கல்வெட்டு மகேந்திர பல்லவன் சமயம் மாறிய செய்தியையும் அவ்வாறு மாறிய பிறகு எடுப்பித்த இக்குடைவரையில் மேற்சொன்ன கங்காதர சிற்பத்தின் இருபுறமும் உள்ள மனித வடிவங்கள் இரண்டும் அப்பல்லவனின் வடிவம் என்ற செய்தியையும் தாங்கி நிற்கிறது. மகேந்திரவர்மரே பெருமிதத்துடன் "இங்குத் தாணுவைத் தோற்றுவித்தேன். அவர் என்றும் அழியாத சிலையாகத் தோற்றமளிக்கிறார். அவரது அருகிலேயே எனது உருவையும் படைத்த நான், சிலையாக நின்று என்றும் அழியாத புகழடைந்து விட்டேன்" என்று கூறுவதாக அமைந்துள்ள   இக்கல்வெட்டுச் செய்தியை சற்று விரிவாகவும் கல்வெட்டில் உள்ளவரிகளை சற்று விளக்கமாகவும் திரு.குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் எடுத்துரைத்திருக்கிறார். அவர் விவரித்த கல்வெட்டுச் செய்தியைப் புகைப்படமாக இணைத்துள்ளோம். இன்று இக்கல்வெட்டின் சில பகுதிகள் சிதைந்து சில பகுதிகள் படிக்கும் நிலையில் உள்ளது. தொல்லியல் துறையினர் குடைவரைக்கு கதவு அமைத்து பராமரித்து வருகின்றனர்.




Monday, August 27, 2018

அறியப்படாத கோயில்கள் - 5

கூத்தப்பார் மருதீஸ்வரர் கோவில்


திருச்சி திருவெறும்பூரில் இருந்து  சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. கல்வெட்டுகளில் இவ்வூர் கூத்தபெருமாள் நல்லூர் என்று அழைக்கப்படுகிறது.
இவ்வூர் இறைவன் மருதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இன்று இவ்வூர் கூத்தப்பார் என்று அழைக்கப்படுகிறது .

 இக்கோவிலில் உள்ள கோபுரம் மிக பிரமாண்டமாக அமைந்துள்ளது.  இக்கோவிலில்  மூன்றாம் ராஜராஜனின் 29வது ஆட்சியாண்டு கல்வெட்டு களில் 3 கிடைக்கப்பெற்றுள்ளன. கல்வெட்டுகளில் இவ்வூர் பாண்டிய குலாசனி வளநாட்டு மீகோழை நாட்டுக்கூத்து பெருமாநல்லூர் என்று குறிக்கப்படுகிறது. மேலும் தற்சமயம் புதியதாக பெருமண்டபம் கிழக்கு வடக்கு தாங்குதளத்தில் இரண்டாம் தேவராயர் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

 இக்கோவிலில் அளவை கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன. முன் மண்டபம் கிழக்கு சகதியில் புஞ்சை நஞ்சை என்ற இரண்டு குறிப்புகளுடன் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளன இவ்வெழுத்து குறிப்புகள் 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டு குறியவையாக இருக்கலாம். கூட்டல் குறிக்கும் இரண்டுக்கும் இடையே  7.31 மீட்டர் இடைவெளி உள்ளது. அக்காலத்தே இப்பகுதியிலிருந்த நன்செய் நிலங்களை அளக்க பயன்படுத்திய நிலம் அளந்த அளவுகோலாகக் இதனை கொள்ளலாம். இக்கோவிலின் முதல்கல்வெட்டு கோவில்களுக்கிடையே நிகழ்ந்த இடப்பரிமாற்றம் பற்றி பேசுகிது. குலோத்துங்கசோழ வளநாட்டு திருப்பனையூர் நாட்டு சோமநாதபுரத்திலிருந்த சோமநாதர், விசுவேசுவரர், ஆகிய கோவில் தானத்தார் மற்றும் அவ்வூரின் மற்றொரு கோவிலான கவிவேதிசுவரர் கோவில் தானத்தாரும் இணைந்து தங்கள் கோவிலின்  பதிமூன்றே முக்கால் வேலி நிலத்தை  கொடுத்துள்ளனர். இக்கோவிலின் ஈசனுக்கு திருநாமத்துக்காணியாக பரிவர்த்தனை செய்து கொடுத்துள்ளனர்.

அப்படியளிக்கப்பட்ட நிலம் உலகனான விஜயாலய முத்தரையர் என்பவரால் கொடையளிக்கப்பட்டதாகும். மேலும் இச்சாசனம் சோமநாதர், திருநெடுங்களத்திலும் உள்ளது. மற்ற இரு கல்வெட்டும் நிலம் பரிமாற்ற தொர்பாய் உள்ளது. இக்கல்வெட்டில் குறிக்கப்படும் ஊர்கள் இன்றும் இப்பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது.அவையாவன :
உப்பூரிக்குடி, திருநெடுங்களம், திருவையாறு,  மாங்குடி, மருதூர், கிளியூர்,  வலவூர், பாகன்குடி.

இக்கோவிலில் உள்ள முன்மண்டபத்தில் பவழசபை  என்று அழைக்கப்படும் 12 தூண்கள் காணப்படுகின்றன தூண்கள் ஒவ்வொன்றும் முச்சதுர இருகட்டுத் ஒன்றாக அமைந்துள்ளது. தூண்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வாத்தியக் கருவியை வாசிப்பது ஐதீகம்.

மேலும் இக்கோவிலில் உள்ள திருமஞ்சன நீர்வழி  என்னும் கோமுகை  மிகவும் பிரசித்தி பெற்றது. கீழே உள்ள சதுர தொட்டியின் மேல் புறம் ஒரு சிங்கத்தின் வாயில் இருந்து நீர் வெளிப்படும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் இரு பக்கவாட்டுகளிலும் பூதகணங்களை கொண்டுள்ளது. பணையோலைக் குண்டலங்கள், சரப்பள்ளி, உதரபந்தம்,  போன்றவை  அமையப் பெற்று பூதகணங்கள் மிகவும் அழகுற அமைந்துள்ளன. கிழக்குப் புறம் உள்ள பூதகணம் சிரட்டைக் கின்னரி வாசிப்பது போலவும்,  மேற்குபுறமுள்ள பூதம் வீணையை வாசிப்பதாகவும் உள்ளது. இவ்வழகிய கோவில் தமிழக அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. நன்முறையிலமைந்த கோவில் இன்னும் அருகேயுள்ள மக்களுக்கு தெரியாமலுள்ளது வருத்தத்திற்குரியது. இவ்வூரில் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ்பெற்றது. அதனைபோலே இக்கோவிலும் புகழ்பெற வேண்டும் என்பதே நம் அவா.




Thursday, August 9, 2018

அறியப்படாத கோயில்கள் - 4


சிற்றறையூர் என்னும் சித்தூர்
புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஓர் சிற்றூரே இன்று நாம் காண இருக்கும் கோவிலாகும். இறைவன் அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள கோவில் இது. தற்சமயம் சுற்றுசுவர் எழுப்பும் பணி நடந்து வருகிறது. கோவில் பூட்டி இருப்பினும் அருகிலுள்ளவர் துணையால் சென்று பார்க்கலாம்.

இக்கோவில் கல்வெட்டுப்படி இவ்வூர் ஒரு பிரம்மதேயமாக இருந்துள்ளது. இக்கோவில் கூடலூர் நாட்டின் கீழ் வருகிறது. இங்கு கிடைக்கும் கல்வெட்டுகளில் தொன்மையானதாக இராஜகேசரிவர்மனின் 4 ம் ஆண்டு கல்வெட்டு (வடபுறச்சுவரிலுள்ள சாசனம்)  கிடைத்துள்ளது. இவரை கண்டராதித்தன் என அடையாளம் கண்டுள்ளனர். இவரது அதிகாரியான மஹிமாலய இருக்குவேள் என்னும் பராந்தக வீரசோழன் என்பவர் இக்கல்வெட்டில் காணப்படுகிறார். சிதைந்த இக்கல்வெட்டின் மூலம் அவர் உவச்சர்களுக்கும் ஸ்ரீபலி கொட்டுவோர்க்கும் நிலம் தானமாய் கொடுத்ததை அறியமுடிகிறது.

கண்டராதித்தரது ஏழாம் ஆட்சியாண்டு கல்வெட்டில் இராசசிங்கன் உத்தமசீலனான மும்முடிச்சோழ இருக்குவேள் என்பவர் இக்கோவில் இறைவனுக்கு தேவதானமாக நலம் கொடுக்கிறார்.

அதன் பின் முதலாம் ராஜராஜர் கல்வெட்டுகள்  கிடைக்கின்றன. இவரது ஐந்தாம் ஆண்டு முதல் கல்வெட்டுகள் கிடைக்கிறது. அக்காலத்தில் இவ்வூர் கேராளந்தக வளநாட்டின் கீழ் வருகிறது. கோவிலின் வடபுற சுவர் ராஜராஜர் கல்வெட்டு ஒன்று  கீழ்வேங்கை நாட்டை சேர்ந்த புலியூரைச் சேர்ந்த கிழவன்  வைத்த நுந்தாவிளக்கு தானம் மற்றும் அவ்விளக்கு எரிய நெய்தானத்திற்கு கொடுத்த காசுகள் பற்றிய குறிப்புள்ளது.

இராஜராஜரது 22ம் ஆண்டு கல்வெட்டு(வடபுற சுவர்)
இறைவனுக்கு திருவமுதம் செய்ய கொடுத்த நிலதானத்தையும், இவ்வமுது நாநாழி அளவு இருக்கவும் இந்நிலங்கள் காச்சுவன் புல்லி ஆநந்தனுக்கும்,  புல்லி கூத்தனுக்கும், கீமுத்தனுக்கும், பாரதாயன நக்கன் வளவன் ஒற்றி என்பவர்ளுக்கும் கொடுத்து இதனை கல்வெட்டில் வெட்டியுள்ளனர்.

ராஜராஜரது 26 ம் ஆண்டு கல்வெட்டு(தென்புற சுவர்) இறைவனுக்கு பாண்டியகுலாசனி வளநாட்டு பெருவாயினாட்டு செட்டன் மாடலன் நக்கநாராயணன் நந்தா விளக்கு தானமளிக்கிறார். மேலும் இக்கல்வெட்டுக்கு அருகே இவரது சிதைந்த 26 ம் ஆண்டு கல்வெட்டுகள் இரண்டுள்ளன.

ராஜேந்திரசோழரின் மூன்றாம் ஆண்டு கல்வெட்டில் கேரளாந்தக வளநாடு ராஜராஜவளநாடு என மாற்றம் அடைகிறது.

இரண்டாம் இராஜேந்திரரின் சிதைந்த கல்வெட்டு ஒன்றும் உள்ளது.

கோவிலின் கருவறை எண்கோண அமைப்பிலுள்ளது.. விமானம் தற்சமயம் இல்லை. கோவில் கட்டிய காலத்தில் இது நிச்சயம் மகோன்னதமாய் விளங்கியிருக்கும். சிகரத்திலுள்ள யாளி வரிகள் தொல்லியல்துறையால் சீரமைக்கப்பட்டுள்ளது.
பிரம்மா, விஷ்ணு, தவ்வை சிற்பங்கள் கோவிலின் முன் நிறுத்திவைக்க பட்டுள்ளன.

Saturday, July 28, 2018

தொல்லியல் எச்சங்கள் - 5

காலத்தால் முற்பட்ட தமிழிக் கல்வெட்டு :


வரலாற்றுச் சிறப்புமிக்க புலிமான் கோம்பை கல்வெட்டுகளைச் சமீபத்தில் காண நேர்ந்தது. இக்கல்வெட்டுகளைக் கண்டெடுக்கும் வரையில்  முதல் தமிழிக் கல்வெட்டாக சங்ககாலப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் காலத்தைச் சேர்ந்த மாங்குளம் கல்வெட்டைக் கருதி வந்தனர். ஆனால் 2006 ல்  தேனிமாவட்டத்திலுள்ள புலிமான்கோம்பை (புள்ளிமான் கோம்பை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட இக்கல்வெட்டுகள் பொஆமு 4 ம் நூற்றாண்டு வரை பழமையானது என கருதப்படுகிறது.
இக்கல்வெட்டுகள் தமிழ்பல்கலைகழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்துறையைச் சார்ந்த யத்தீஸ்குமார் மற்றும் பாலமுருகன் தலைமையில் கண்டறியப்பட்டது. பொதுவாய் கருதப்படும் பொஆமு 3 ம் நூற்றாண்டிற்கு முன்பாகவே தமிழகத்தில் தமிழி இருந்து வந்துள்ளது என்பதற்கு இக்கல்வெட்டுகள் ஒரு சான்றாகும்.

முதல் கல்வெட்டு



'.. அன் ஊர் அதன்
..ன் அன் கல் '

என்று சிதைந்துள்ளது முதல்கல்வெட்டு. ஒரு ஊரைச் சார்ந்த ஒருவருக்கு எடுக்கப்பட்ட கல் என்ற இதற்குப் பொருளுரைக்கின்றனர்.

இரண்டாம் கல்வெட்டு



'வேள் ஊர் அவ்வன் பதவன்'

என்றுள்ளது இரண்டாம் கல்வெட்டு. இதில் வேள் என்பது சங்ககால வேளிர் ஆண்ட ஊரை குறிக்கும் பொருளில் உள்ளது. இதில் வேள்ஊரை சார்ந்த பதவன் மகனாகிய அவ்வனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்ற பொருள் தருகிறது.

மூன்றாவது கல்வெட்டு



'கல்
பேடு தீயன் அந்தவன்
கூடல் ஊர் ஆகோள்'

என்றுள்ளது மூன்றாம் கல்வெட்டு. சங்கப்பாடலில் வரும் ஆநிரை கவர்தலே இங்கு 'ஆகோள்' என்று சுட்டப்படுகிறது.
கூடலூரில் நடந்த இவ்வாநிரை கவர்தல் போரில் உயிர்நீத்த பேடு தீயன் அந்தவன் என்ற வீரனுக்கு எடுப்பித்த நடுகல் இது.
இக்கல்வெட்டுகள் இன்று தமிழ்பல்கலைகழகத்தில் கல்வெட்டியல் துறையில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளன.

Friday, July 27, 2018

கல்வெட்டுக் கோயில்கள் - 2


திருக்கோடிக்காவல் கோவிலமைப்பு குறித்து சென்ற பதிவில் கண்டோம் இனி இக்கோவிலின் முக்கிய கல்வெட்டுச் செய்திகளைக் காண்போம்.

கல்வெட்டு 1:
கோயில் உண்ணாழிகைத் தென்புறச் சுவரிலுள்ள  பல்லவ மன்னன் நந்திவர்மரின் பத்தொன்பதாவது  ஆட்சியாண்டுக் கல்வெட்டு. (பழங்கல்வெட்டில் இருந்து படியெடுக்கப்பட்டது)
கல்வெட்டு அறிக்கை : (ARE.37 of 1931)
கல்வெட்டுச் செய்தி:
திருக்கோடிக்காவிலிருக்கும் சிறுநங்கை ஈஸ்வரம் எனும் கோவிலில் நுந்தா விளக்கெரிப்பதற்காக ஆழிற்சிறியன் என்பவன் மூலதனமாக வைத்த நூறு களம் நெல்லினை இக்கோயிலில் வழிபாடு நடத்தி வரும் ஆத்திரையன் நாராயணன் ஏறன் மற்றும் அவனது தம்பியர் மூவரும் பெற்றுக் கொண்டு அதில் வரும் வட்டியிலிருந்து விளக்கிற்கு உழக்கு நெய்யளிக்க ஏற்ற செய்தியை அறிகிறோம்.

கல்வெட்டு 2:
கோயில் முன்மண்டபத்தில் தென்புறம் அதிட்டானம், குமுதம், ஜெகதியில் உள்ள பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மரின் இருபத்தியிரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு. (பழங்கல்வெட்டில் இருந்து படியெடுக்கப்பட்டது)
கல்வெட்டு அறிக்கை : (ARE.38 of 1931)
கல்வெட்டுச் செய்தி:
பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மரின் மனைவி  வீரமகாதேவியார் ஹிரண்யகர்ப்பம் மற்றும் துலாபாரம் என்ற இரு வேள்விகளைச் செய்து அதிலிருந்து திருக்கோடிக்கா மகாதேவர்க்கு அளித்த 50 கழஞ்சு பொன்னில் 25 கழஞ்சில் வரும் வட்டியிலிருந்து நாள்தோறும் இருநாழிகை அரிசியும் ஒரு பிடி நெய்யும் கொடுக்க வேண்டுமெனவும், நொந்தா விளக்கெரிக்க நாள்தோறும் உழக்கு நெய்யினை அளிக்க வேண்டுமெனவும் மேலும் இப்பணியை ஊர்ச் சபையார் நிறைவேற்றவும் பணிக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டின் மூலம் அறிகிறோம்.

கல்வெட்டு 3:
கோயில் உண்ணாழிகை மேற்குப்புற அதிட்டானத்தில் உள்ள முற்கால பாண்டியரான கோமாறஞ்சடையனின் நான்காம் ஆண்டு கல்வெட்டு.
கல்வெட்டு அறிக்கை :  (ARE.21 of 1930-31)
கல்வெட்டுச் செய்தி:
இக்கோவில் இறைவனுக்கு நந்தாவிளக்கு எரிக்க பேரையூர் நாட்டு பனையூர் அரையன் கள்வன் என்பவர் பதினைஞ்சு கழஞ்சு பொன்னளித்துள்ளார்.
இதற்கு வட்டியாக பிழையாநாழி என்ற நாழியின் அளவுப்படி உழக்கு நெய்யினை, திருக்கோடிக்கா நாராணக்க சதுர்வேதிமங்கல சபையார் கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

கல்வெட்டு 4:
கோயில் முன்மண்டபத்தில் தென்புறம் அதிட்டான ஜெகதியில் இளங்கோ முத்தரையரின் 13 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு.
கல்வெட்டு அறிக்கை : (ARE.38 of 1931)
கல்வெட்டுச் செய்தி:
இக்கல்வெட்டு சிதைந்துள்ளது. இம்முத்தரையரின் காலத்திலே நாட்டு மன்றாடிகள் 50 ஆடுகளும் வேறொருவர் 100 ஆடுகளும் இக்கோயிலிறைவனுக்கு விளக்கெரிக்க தானமாக அளித்த செய்தியைக் குறிக்கிறது.

Sunday, July 22, 2018

கல்வெட்டின் நிலையறிதல் - 13

பொன்னியின் செல்வன் :

கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவல் பற்றி அறியாத வாசகர் வட்டமும், வரலாற்று ஆர்வலர்களும் அரிது.
அந்நாவலில் ராஜராஜசோழன் அவரது  இயற்பெயரான அருமொழி தேவன் என்ற பெயரில் வருவார். மேலும் அவருக்கு அந்நாவலில் பொன்னியின் செல்வன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

அந்நாவல் ஒரு புதினம் என்றாலும். அதில் சுட்டப்பெறும் பொன்னியின் செல்வன் என்ற சிறப்புப் பெயர் மக்களின் மனதில் நிலைகொண்டு விட்டது. ஆனால் அப்பெயர் அவரது கல்வெட்டுகளிலோ, செப்பேட்டிலோ எங்கும் குறிக்கப்படுவதில்லை. இவ்விஷயம் கல்கி அவர்களின் சுவைமிகு கற்பனை ஆகும்(?). ஆனால் இப்பெயருடன் தொடர்புடைய கல்வெட்டு ஒன்று திருவண்ணாமலை அருகே திருமலை என்ற ஊரிலுள்ளது. இவ்வூரிலே ராஜராஜரின் சகோதரி குந்தவை சமணர்களின் வழிபாட்டுக்காக அவரின் பெயரிலேயே ஏற்படுத்திக் கொடுத்த குந்தவை ஜீனாலயத்தில் தான் இவ்வரிய கல்வெட்டு உள்ளது. இக்கோவிலை பற்றி விரிவாய் பின்னொரு பதிவில் காண்போம்.

இனி இக்கல்வெட்டுச் சிறப்பினைக் காண்போம் :

இக்கல்வெட்டு அவரின் 21ம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட பாடல் வடிவில் அமைந்த கல்வெட்டாகும். இதில் நந்தாவிளக்கு, சிற்பங்கள் அமைத்தவை குறித்த குறிப்புள்ளது. மேலும் கணிசேகரமரு பொற்சூரியன் என்பவர் இம்மலையின் இருபுறத்திலும் கலிங்கு அமைத்ததை கூறுகிறது. கல்வெட்டில் இம்மலை வைகைமலை என அழைக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு வரிகளை காண்போம் :

அலைபுரியும் புனற்பொன்னி ஆறுடையசோழன்
அருண்மொழிக்கு யாண்டு யிருபத்தொன்றாவதென்றும்
கலைபுரியுமதி நிபுணன்   வெண்கிழான் கணிசே
கரமருபொற் சூரியன்நன் திருநாமத் தால்வாய்
நிலைநிற்கும் கலிங்கிட்டு நிமிர்வைகை மலைக்கு
நீடூழி இருமருங்கும் நெல்விளையக் கொண்டான்
கொலைபுரியும் படையரைசர் கொண்டாடும் பாதன்
குணவீர மாமுனிவன் குளிர்வைகை கோவே

இக்கல்வெட்டில் பொன்னியாருடைய சோழனும் வருகிறது அருமொழி என்ற ராசராசரின் இயற்பெயருமுள்ளது.
யார் கண்டது?  இக்கல்வெட்டு கூட கல்கிக்கு பொன்னியின் செல்வன் என்று பெயரிட ஊன்றுகோலாய் இருந்திருக்கலாம். இக்கல்வெட்டு நன்னிலையிலுள்ளது.

Friday, July 20, 2018

கல்வெட்டுக் கோயில்கள்-1

திருக்கோடிக்கா


தேவாரம் பாடப்பெற்ற காவிரி வடகரைத் தலங்களிலே 37 வது கோவிலாகிய திருக்கோடிக்காவானது மாயவரத்திலிருந்து கதிராமங்கலம் செல்லும் சாலையில் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூர் கல்வெட்டில் வடகரை பிரம்மதேயம் நல்லாற்றூர் நாட்டு திருக்கோடிக்காவாகிய கண்ணமங்கலம் என அழைக்கப்பட்டுள்ளது.

ஐந்துநிலை கோபுரம் கொண்ட அழகியத் திருக்கோவில். விமானம் திராவிட வகையினைச் சார்ந்தது. பிற்காலக் கட்டுமானத்தால் கோவில் தளம் உயர்த்தப்பட்டு அதிட்டானம்  மறைந்துள்ளது. மேலும் கருவறையைச்சுற்றிய பிற்கால கட்டுமான சுவற்றால் அங்குள்ள அழகிய கோட்டச் சிற்பங்களை முழுமையாக ரசிக்க முடியாத நிலையுள்ளது.

கோவிலின்  தென்புற சுவற்றில் காரைக்கால் அம்மையாருடன் மகளிர் ஒருவர் வணங்குவது போன்ற ஆடல்வல்லான்  சிற்பமுள்ளது,  தென்புறக் கோட்டத்தில் அழகிய ஆலமர் செல்வன் சிற்பம் அழகாக உள்ளது, பிற்காலச் சிலையின் ஆக்கிரமித்தல் காரணமாய் முன்னவர் மறைக்கப்பட்டுள்ளார்.
மேற்புறக் கோட்டத்தில் அடிமுடி காணா அண்ணல்  சிற்பமும், வடபுறக் கருவறைக் கோட்டத்தில் நான்முகன் சிற்பமும், வடபுற அர்த்தமண்டபக் கோட்டத்தில் அரிகண்ட, நவகண்ட வீரருடன் கூடிய கொற்றவைச் சிற்பமும் அழகாய் செதுக்கப்பட்டுள்ளன.

திருச்சக்கரப்பள்ளியில் உள்ளவாறு அரசமகளிர் ஈசனை வணங்குவது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டு முழுமையடையாது உள்ளது. (இக்கோவிலில் செம்பியன்மாதேவி திருப்பணி செய்ததாக கல்வெட்டுள்ளது. இச்சிற்பம் அவராகவும் இருக்கலாம்?)
வேதிபத்ர உபபீடத்தில் சிவபுராணம், இராமயண காட்சிகள் குறுஞ்சிற்பங்களாய் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டிய மகளிர், குடக்கூத்துச் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டுகளை பொருத்தமட்டில் மூன்றாம் நந்திவர்மன், நிருபதுங்கவர்மன், பராந்தகர், உத்தமசோழர், இராஜராஜசோழன், இராஜேந்திரர், விக்ரமசோழன், குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜர், கோமாறஞ்சடையன், கோவிளங்கோ முத்தரையர், காடவர் கோன் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டுகள் என  இக்கோவிலில் மொத்தம் 48 கல்வெட்டுகள் உள்ளன. பல்லவர் காலம் தொடங்கி கோப்பெருஞ்சிங்கன் காலம் வரை இக்கோவில் மேன்மைபெற்று இருந்துள்ளது.

இக்கோவிலைப் பற்றியும், இறைவழிபாடு பற்றியும், நிலவிற்பனை, நிலவெல்லை பற்றியும் தெரிந்து கொள்ள இக்கோவிலின் கல்வெட்டுகள் பெரிதும் துணைபுரிகின்றன.
முதலாம் இராஜராஜர் காலத்தில் 'சூரியதேவர்' கோவிலொன்று இருந்தது தெரிய வருகிறது.

கல்வெட்டுகளில் சில பெயர்கள் தமிழ்ச்செறிவோடு காணப்படுகின்றன. உதாரணமாக 'பிழையாநாழி' என்றொரு அளவுக்கருவியும், 'புதுவாய்க்காலுக்கு நின்று போந்த உட்சிறுவாய்க்காலுக்கு கிழக்கு ' என்ற நில எல்லையும், 'தளி அர்ச்சிப்பான்' என்று கோவில் வழிபாடு செய்வோரும்,  'தீப்போர்க்குச் செம்பொன்' என்ற தீயில் புடம்போட்ட தங்கமும் குறிப்பிடபடுவது கருத்தைக் கவருவதாக உள்ளது.

இவ்வூரில் முன்பிருந்த பழமையான கோவிலை மாற்றி கற்கோவிலாக அமையப்பெற்ற போது முன்பு அக்கோவிலில் காணப்பட்ட கல்வெட்டுகளையெல்லாம் மீண்டும் புதிதாக அக்கோவிலில் கல்லில் வெட்டியிருப்பதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பண்டைய மக்கள் கல்வெட்டுகளை முக்கிய ஆவணங்களாக போற்றி பாதுகாத்ததை இதன்மூலம் உணரமுடிகிறது.

சிறு சிறு பகுதிகளாக அக்கல்வெட்டு செய்திகளை இனி காண்போம்.
தொடரும்.......